Monday, June 15, 2009

மதுரை...!

நாற்திசை கோபுரங்களின்
மையப் புள்ளியில் ஆரம்பித்து
சுற்றி சுழன்று
அதன் வாசல்களிலேயே
பூர்த்தியாகி விடுகிறது
மக்களின் அனைத்து
தேவைகளும்!!


மெரினாவின் சாந்தோமின்
அலைசாரல் இங்கில்லை
வரலாறுகளை தின்றுவிட்டு
நினைவுகளை துப்புகின்றன
இங்கிருக்கும் சின்னங்கள்!!.


சிலம்புக் கதை சொல்லி
எரித்துப் பார்த்தாயிற்று
வெள்ளந்தி மனிதர்களின்
வெள்ளை மனசாரல்களில்
நனைந்து பாருங்கள் !!!


பொது இடத்தில்
சாதியம் பேசி
துவேசிக்கப்பட்டவன்
பெரிய வீட்டின்
அடுப்படியில் அமர்ந்து
குழம்பு போதவில்லை
என்பான்!!


ஓரிரு முப்போக
விளைச்சல் நிலங்களின்
சேறு பூசிக்கொண்டவர்கள்!!
அரசியல் வாக்குறுதிகளின்
தார் பூசிக்கொண்டவர்கள்!!.


வருடம் முழுதும்
வேலை பார்க்கும்
கட்சித் தொண்டன்
தேர்தல் அன்று
கூலி பெறுவான்
மக்களுக்கும் பங்கு
தருவான்!!


இரத்தம் பார்க்கும்
கூட்டம் என்பார் !
காரணமின்றி கத்திப்பேசி
கதைக்களம்
மதுரை என்பார் !!
காதைக் கிழிக்கும் விசிலுடன்
நூறு நாட்கள் ஓடும் சினிமா!!!


மதுரையின்றி
நிறைவுறுவதில்லை
ஊடகங்களின் அன்றைய
செய்திப் பொழுதுகள்!!!


இன்றைய துர்ச்செய்தி
மென்று விடுகிறது!!!
நேற்றைய நற்செய்தியை !!
விளங்குவதேயில்லை
எதை நோக்கியப் பயணம்
இதுஎன்று ??.

No comments: